×

கடந்த 2018ம் ஆண்டு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கு:10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடலூர்: சோனக்குப்பத்தை சேர்ந்த மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு சோனக்குப்பத்தில் இருதரப்பு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார்.

கடலூரில் கடந்த 2018ம் ஆண்டு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பஞ்சநாதன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே கடலூர் நீதிமன்றத்திலும் மற்றும் மீனவ கிராமத்திலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.

கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தியதாக கூறி, மீன்பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், கடலூர் துறைமுகம் சோனக்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் பிரச்சனை இருந்து வந்தது.

இது தொடர்பாக கடந்த 15-05-2018ம் ஆண்டு இருதரப்பு மீனவர்கள் இடையே கடலிலேயே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தேவனாம்பட்டினம் மற்றும் சோனக்குப்பம் மீனவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பஞ்சநாதன் என்ற மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துவிட்டார். மீதமுள்ள 20 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டு வந்தது.

இது தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி கடலூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு நீதிபதியால் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ள ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின்மற்றும் முத்துக்குமார் ஆகிய 10 பேருக்கு ரூ.5,000 அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

The post கடந்த 2018ம் ஆண்டு மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கு:10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Sonakkapatam ,Panchanathan ,Sonakkapam ,
× RELATED பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி